தமிழ் மெல்ல இனி சாகும்......
சரியாகத்தான் கணித்துள்ளான் பாட்டுப் புலவன் பாரதி. ஆம் தமிழ் மெல்ல அல்ல வேகமாகவே செத்துக்கொண்டு வருகிறது. வடமொழிக்கலப்பிலிருந்த நம் தாய்மொழியை காப்பாற்றிக்கொடுத்துச் சென்ற தமிழறிஞர்கள் திரும்பிவந்து எங்கே எங்களுடைய தனித்தமிழ் என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? தாய் மொழி எழுதப்படிக்கத் தெரியாத ஆங்கிலேயரையும், ஜெர்மானியரையும், போர்ச்சுக்கீசியரையும், சீனர்களையும் உங்களால் காட்ட முடியுமா? ஆனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத பச்சைத் தமிழர்களை என்னால் காட்டமுடியும் !! எவ்வளவு வேதனையான உண்மை இது தெரியுமா....
ஒருவன் எப்பேற்பட்ட அறிஞனாகவும், கலைஞனாகவும், பன்மொழிப்புலவனாகவும் இருந்தாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி சிந்திக்கும் போது தாய் மொழியில் மட்டும் தான் சிந்திக்க இயலும். இது உளவியல்பூர்வமான உண்மை. அப்படி சிந்திப்பதால் தான் சீனரும், ஜப்பானியரும் ,ரஸ்யர்களும் அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ளன.
உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா ? அமெரிக்காவில் ஐ போன் வெளியான மறு நாளே அதே தொழில்னுட்பத்துடன் அந்த விலையைவிட 10 மடங்கு குறைவான விலையில் சைனாவில் வெளிவந்துவிடும். இதற்குக் காரணம் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல். ஆனால் இங்கே நமது இந்தியாவில் ம்கூம், முடியவே முடியாது. அப்படியானால் இந்தியர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைவானதா? இல்லவே இல்லை, மொழி !! மொழி ஒன்றுதான் காரணம்.
கடந்த இருபது வருடத்தில் தமிழகத்திலிருந்து கண்டறியப்பட்டு வெளியான உற்பத்திப் பொருட்கள் ஒன்றையாவது உங்களால் காட்டமுடியுமா கிரைண்டரைத்தவிர?? முடியாது! ஏனெனில் நாம் தான் ஆங்கிலத்தை மொத்த குத்தகைக்கு வாங்கிவிட்டோமே, பிறகெப்படி முடியும்...... இந்தியாவில் வேறு எந்த மானிலத்திலாவது தாய் மொழியையே படிக்காமல் ஆராய்ச்சிப் பட்டம் பெறமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் முடியும் !!!
வருடத்திற்கு 3 லட்சம் ஐடி இஞ்சினியர் வெளியே வரும் தமிழ்நாட்டில் கோவை
சென்னையைத்தவிர ஐடி நகரங்களைக்காட்ட முடியுமா? ஆங்கிலம் ஒரு மொழியாகப் பார்க்கப்பட்ட காலம் போய், அது ஒரு கௌரவமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. நான்கு பேர் மத்தியில் தமிழில் பேசினால் அவமானமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. ஏன் ஆங்கிலத்தை எந்த இடத்திலும் காணமுடியாத சீனாவும் ,ஜப்பானும்,ரஸ்யாவும், பிராண்ஸும் ,போர்ச்சுக்கல்லும்,ஜெர்மனியும் இன்று உலக வல்லரசுகளாகத் திகழவில்லையா? வளர்சி என்பது மொழியில் கிடையாது, மக்களிடம் தான் உள்ளது.
சரி இனிமேல் ஆங்கிலம் இல்லாமல் இந்தியாவில் முடியாது, அதற்காக தாய் மொழியை அப்படியே விட்டுவிடலாமா? பேருந்தில் பயணச்சீட்டு தாருங்கள் என்று கேட்பது எவ்வளவு அந்நியமாகத் தெரிகிறதோ, அதேபோல் நாளை இங்கே வா, உன் பெயர் என்ன? என்பன போன்ற சாதாரண வாக்கியங்கள் கூட அந்நியமாகத் தெரியாது என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது.?? இன்று தமிழ் நீடித்திருக்க ஓரளவு காரணம் அச்சில் இருப்பதால் தான். அதிலும் சில பத்திரிக்கைகளில் ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழை, ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஐக்கிய மொழி ஆய்வு நிறுவனம் இன்னும் 100 வருடங்களில் அழிந்துவிடும் மொழிகள் குறித்த ஆய்வில் தமிழ் மொழியும் முதலில் இடம்பெற்றதும், பின்னர் சில பல அரசியல் காரணங்களால் நீக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படியே போனால் தமிழ் மொழியும் நம் பண்பாடு கலாச்சாரம் போல புத்தகங்களிலும், ஓலைகளிலும் இன்னும் சொல்லப் போனால் அருங்காட்சியகங்களிலும் மட்டும் காணக்கூடிய அவல நிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
அந்த நிலையைத் தடுக்க வேண்டும் என்றால், அது நம் கையில் தான் உள்ளது என்று பொய் சொல்லமாட்டேன்.னம் கையிலும் ஓரளவு உள்ளது. இருப்பினும் அது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. எங்கே முதலமைச்சரே, பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் முக்கிய கூட்டங்களிலும் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் ! என்று நீங்கள் நினைப்பதையும் உணர முடிகிறது. இருந்தாலும் அரசாங்கம் மனது வைக்காவிட்டால் தமிழ் மெல்ல இனி சாகும் எனும் காலம் போய், தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது என்ற காலம் வந்துவிடும்.
உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாமே!!!!!
உங்கள் சீலன்...